Saturday, September 12, 2009

பால்மா வாங்கிட்டு வாங்க...


இந்தக் கதையை சொல்லும் முன் ஒரு விடயத்தை கூறலாமென்று நினைக்கின்றேன். நீங்கள் யாரும் என்னைத் தவறாக விளங்கிக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகின்றேன். முஸ்லிமான ஒவ்வொருவரும் ஏதோவொரு தஃவா அமைப்புடன் இணைந்திருப்பது அவர்களுக்கு பாதுகாப் பானதாகும்.

நானும் ஒரு தஃவா அமைப்பில் சில பணிகளை அல்லாஹ்வுக்காக செய்து வருகிறேன். குறிப்பாக மாணவர்களுக்கான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதில் மிகவும் மும்முரமாக ஈடுபடுவதுண்டு. கொஞ்சம் பொறுமையாக இருங்கள். ரிபா நானா வருகிறார்.

"அஸ்ஸலாமு அலைக்கும் ரிபா நானா"

"வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு"

"நான் இன்டைக்கு அந்திக்கு ஒங்கட ஊட்டுக்கு வரத்தான் இருந்தேன். நீங்க முந்திட்டிங்க. கடைய மூடிட்டிங்களா?"

"ம் இன்டக்கி லீவு நாள்தானே, பஸாரில் ஆட்களும் இல்லை. அதோட கொஞ்சம் உங்கள் எல்லாரையும் சந்தித்துவிட்டுப் போகலாமென்று நினைத்து வந்தேன். லாபீர் நானாவும் வாரதென்று சொன்னார்."

நான் போனாவை மூடி வைத்து விடுகிறேன். கொஞ் சம் நேரம் பேசிக் கொண்டிருக்கும்போதே லாபிர் நானா வும் வந்தார். மனைவி பிளேன்டி ஊத்தியிருப்பதாக மகள் அஷ்பா சொல்லிவிட்டுச் சென்றாள்.

பிளேன்டியைக் குடித்துக் கொண்டே ஓ எல் மாண வர்களுக்கான புரோக்ரேம்பற்றி பேசிக் கொண்டிருந் தோம். மஃரிப் நேரமாகியது. பள்ளிக்குச் செல்வோம் என்று மூவருமாக வெளிக்கிட்டோம். அஷ்பா ஓடி வந்து சொன்னாள்; "உம்மா, தம்பிக்கு பால்மா வாங் கிட்டு வரட்டாம்."

"சரிம்மா"

மஃரிப் தொழுதுவிட்டு கொஞ்ச நேரம் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த போதே இஷாவுடைய நேரமாகி யது. இஷா தொழுதுவிட்டே கலந்துரையாடலை ஆரம் பிக்கலாமென லாபிர் நானா சொன்னார். எனவே, அவ ரது கருத்தை ஏற்றுக் கொண்டோம்.

கலந்துரையாடல் ஆரம்பமானது. எவ்வாறான நிகழ்ச்சிகளை நடத்துவது,வளவாளர்களாக யாரை அழைக்கலாம் போன்ற விடயங்களை பேசி முடிக்கும் போதே 10.00 மணி ஆகிவிட்டது. இப்போதைக்கு முடித்தால்தான் 11.00 மணிக்கேனும் வீட்டுக்கு போய் சேரலாம் என நினைத்துக் கொண்டு பொறுப்புக்களை நாளைய கலந்துரையாடலில் பகிர்ந்துகொள்ளலாம். இப்போதைக்கு இதனை முடித்துக் கொள்வோமா என்று எனது கருத்தைத் தெரிவித்தேன். எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.

11.00 மணிக்கு முன்பதாகவே வீட்டை அடைந்து விட்டேன். அஷ்பா,அம்ஜத் இருவரும் தூங்கியிருந் தனர். ஹுஸ்னா மட்டும் விழித்திருந்தாள். இருவருமாக சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லும்போதுதான் "பால்மா கொண்டு வந்திங்களா?" என்று கேட்டாள்.

"இல்லவா மறந்திட்டன்"

"நேற்றே பால்மா முடிந்துவிட்டது, நேத்தும் வெளிய போகக்குல்ல சொன்னேன். மறந்துட்டு வந் தீங்க. இன்டைக்கும் மறந்திட்டிங்க"

"சரிம்மா இன்ஷா அல்லாஹ் நாளைக்கு ஸுப ஹுக்கு வாங்கிட்டு வாறேன்"

ஸுபஹுக்குப் பள்ளிக்குச் செல்லும்போது இமாம் இரண்டாவது ரகஆத்தில் இருந்தார். தொழுகை முடிந்து மஃஸூராத் ஓதிவிட்டு வெளியே வரும்போது ரஸ்மி வந்திருந்தான்.

"அஸ்ஸலாமுஅலைக்கும் ரஸ்மி சுகமா இருக்கிறிங் களா? எப்ப வந்திங்க"

"நேற்று வந்தேன் சேர்"

"கொலேஜ்ல என்ன விசேடங்கள்"

"பெரிதாக ஒன்றுமில்லை சேர், முஹம்மத் சேர் ஸலாம் சொன்னதாக சொல்லச் சொன்னார்."

உரையாடல் தொடர்ந்தது ரஸ்மியையும் கூட்டிக் கொண்டு வீட்டுக்குச் சென்றேன். ஹுஸ்னா தேனீரும் பிஸ்கட்டும் தந்தாள். ரஸ்மி விடைபெற்றுச் செல்லும் போது ஏழு மணியாகிவிட்டது. நானும் பாடசாலை செல்லும் நேரமாகிவிட்டது.

அவசரமாக ரெடியாகிக் கொண்டு, ஹுஸ்னா மேசையில் வைத்திருந்த கடலையை நானும் அஷ் பாவும் சாப்பிட்டோம்.

"ஹுஸ்னா என்னமாவது வாங்கிட்டு வரனுமா?"

"நீங்க இன்னும் புள்ளக்கி பால்மாவே வாங்கிட்டு வரல. ரெண்டு நாளாகிடிச்சி. புள்ள பாவம், ஸ்கூல்விட்டு வரும் போது மறந்திடாம வாங்கிட்டு வாங்க"

"சரிம்மா"

"சரின்டு சொல்லிவிட்டு போவிங்க யாரோடை யாவது பேசிக் கொண்டு வூட்டுக்கே வந்திருவிங்க. எனக்கு ஏலுமென்டா நான் கடைக்குப் போய் வாங் கிட்டு வந்திருப்பேன்."

"இல்ல, இன்டக்கி கட்டாயம் வாங்கிட்டு வரு வேன். வேறேதும் சாமான்கள் வாங்கிட்டு வரனுமா? மரக்கறி இருக்குதா? அஷ்பாக்கு என்ன வேணும்?"

"மரக்கறி ஏதும் கொஞ்சம் வாங்கிட்டு வாங்க. வேறொன்டும் தேவயில்ல."

ஹுஸ்னா பாடசாலைக் காலத்தில்கூட ஏழாம் வகுப் பிற்குப் பிறகு ஒரு கொப்பி வாங்கக் கூட கடைக்குச் சென்றதில்லை என்பதை என்னிடம் சொல்லியிருக்கி றாள். அவளுக்கு உடைகள் வாங்குவதற்குக் கூட உம் மாவும் வாப்பாவும் இல்லாமல் செல்வதில்லை. அதை மாமியும் என்னிடம் சொல்லியிருக்கிறாள். திருமணம் முடித்ததன் பின்னர் அவள் கடைக்குச் செல்வதற்கான சந்தர்ப்பங்களை நான் ஏற்படுத்தியதே இல்லை. சிலவேளை, வேலைப்பளுக்களால் அவள் சொன்னதை மறந்து மூன்று நாட்கள் கடந்து விடுவதும் உண்டு.

இன்று ஸ்கூல் முடிந்து வரும்போது எப்படியும் பால்மாவை வாங்கிக்கொண்டு வரவேண்டுமென நினைத்துக் கொண்டே சென்றேன்.

கடைசிப் பாடம் எனக்கு ஃப்ரீயாக இருந்தது. ஸாஹிர் சேர் வந்தார்.

"சேர் எப்படி சேர். ப்ரோக்ரேம் வேலைகள் முடிஞ் சிட்டதா?"

"ஓம் சேர். ஃபைல்கள பிரின்ட்பண்ணி ஊட்ல வெச்சிருக்கிறேன். ரஸ்மி வந்திருக்கிறார். அவரிடம் ஸ்டிக்கர்களை ஒட்டக் குடுக்கலாம்."

"சரி சேர் நான் ப்ரின்ஸிபல கொஞ்சம் பாத்துட்டு வாரன். அப்படியே பெல் அடிச்சதும் பேவோம்."

"சரி சேர்"

அலுவலகத்திற்குச் சென்று கையொப்பம் வைத்து விட்டு நானும் ஸாஹிர் சேருமாக வீட்டுக்கு வரும் போது அஷ்பா மொன்டிசூரி உடையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். என்னைக் கண்டவுடன் "அபீ இப்பயும் பால்மாவை வாங்கிட்டு வரல்லயா?" என்றாள்.

Friday, April 3, 2009

இது நண்பர்களின் கதை!



( i )

இரவு பத்து மணியிருக்கும். அலுவலகத்தில் கொஞ்சம் பிஸியாக இணையத்தில் தகவலொன்றைத் தேடிக் கொண்டிருந்தேன். கைத்தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்தது. நண்பன் ஒருவன் தொடர் பிலிருந்தான். பல நண்பர்கள் கொன்பரன்ஸிலிருப்பதாகவும், என்னையும் இணைத்துக் கொள்வதாகவும் கூறினான். எனக்கு பெரும் சங்கடமாகப் போய்விட்டது.



"யார் யார் யார் கொன்பரன்ஸில் இருக்கிறாங்க."
அவன் "நான், ஹன்பல், ரிம் ஸான்,..." என்றான்.
சிறிது நேரம் சில பட்டன்களை அழுத்தும் சத்தம் கேட்டது. அழைப்பு துண்டிக்கப்பட்டு விடக்கூடாதா என மனம் ஏங்கியது.
அவன் பேசினான். "எனது போனிலிருந்து கொன்பரன்ஸ் போட ஏலாம இருக்குது. ரிம்ஸான்ட போன்ல இருந்து போட்றன்." என்று தொடர்பைத் துண்டித்தான்.



மீண்டும் கைத்தொலைபேசி இசைத்தது.
"எங்கடா மற்றயவன்கள்"
"ஹன்பல்ட போன்ல சார்ஜ் இல்லயாம்"
"நான் நெனச்சதுதான். அவன் என்னோட பேசமாட்டான்."
என்று கூறியது நான்தான்.
சிறிதுநேரம் பேசிவிட்டு பக்கத்திலிருந்த இன்னுமொரு நண்பனிடம் கைத்தொலைபேசியைக் கொடுத்து விட்டு மீண்டும் இணையத்தில் தேடத் தொடங்கினேன்.



( ii )

‘அம்ப யஹலுவோ’ என்ற கதையை சிலவேளை நீங்கள் வாசித் திருப்பீர்கள். உங்களுக்கு 25 வயதுக்கு மேலிருக்குமென்றால் தொலைக்காட்சியில் நாடகமாக பார்த்திருப்பீர்கள். அல்லது கடந்த மத்திய, வடமேல் மாகாண சபைத் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்திருந்தால் அதன் ஒரு சிலக் காட்சிகளை பார்க்கக்கிடைத்திருக்கும். சில வருடங்களுக்கு முன்பு எவரேனும் இரண்டு நெருங்கிய நண்பர்களைப் பார்த்தால் ‘அம்ப யஹலுவோ’ என்று சொல்வார்கள். ‘அம்ப யஹலுவோ’ என்றால் பால்ய நண்பர்கள்.



நானும் ஹன்பலும் அம்பயஹ லுவோ இல்லாவிட்டாலும் நெருங்கிய நண்பர்கள் தான். ஓ லெவல் படித்துவிட்டு விடுதி வாழ்க்கைக்குள் நுழைந்த பின்னர்தான் ஹன்பலை எனக்குத் தெரியும். அதனால் மணல் வீடு கட்டியும், மண் பிட்டு செய்தும், சேறு விளையாடியும் மழையில் நனைந்ததுமான அனுபவங்கள் இல்லை.



வீட்டை விட்டு முதன் முதலாக பிரிந்த எனக்கு, ஒரு கிராம சூழலில் வளர்ந்த எனக்கு, பல பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுடன் பழகுவது மிகக் கஸ்டமாக இருந்தது. அதில் நியாயம் இருப்பதை ஏற்றுக் கொள்வீர்கள்.
ஆரம்பத்தில் எனக்கு ஆறுதல் சொன்னது பக்கத்திலிருந்த குண்டு நண்பன் ரிஸ்மிதான். அவனை நாங்கள் ‘பீல்’ என்றுதான் கூப்பிடுவோம். ‘பீல்’ என்றால் யானை, அதையே சிங்களத்தில் ‘அலியா’ என்றும் சொல்வதுண்டு. அவனுடன் கொஞ்சம் நெருக்கமாக பழகமுடிந்தது. காலத்தின் வேகத்திற்குள் அவனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சில வருடங்களிலே வளாகத்திலிருந்து நின்று விட்டான்.



அதன் பிறகான காலப்பிரிவில் நிறைய நண்பர்களுடன் பழகக்கிடைத்தது. அவர்களில் ரிம்ஸான் முக்கியமானவன். எனினும் அவனைப் பற்றி இங்கு சொல்வது நோக்கமில்லை. அதன்பிறகுதான் ஹன்பலுடன் தொடர்பு ஏற்பட்டது. ஹன்பல் எல்லாத் துறையிலுமே திறமையானவன். கல்வியிலும் விளையாட்டிலும் மிகச் சிறப்பாக செயற்படுவான்.
அவன் பரீட்சையின் போது தூக்கம் விழித்துப் படிப்பான். அப்படியே மேசையில் சாய்ந்து தூங்கி விடுவான். பின்னர் எழுந்து படிப்பான். அப்படியே தூங்குவான். நான் இந்த செயல்களைப் பார்த்து தனியாகவும் நண்பர்களிடம் சொல்லியும் சிரிப்பேன்.



பரீட்சைக் காலங்களில் அவனுக்கு அடிக்கடி சுகயீனம் ஏற்படும். அவனுக்கு சிங்களம் தெரியாததால் என்னிடம் தான் வருவான். எந்த வேளையிலும் அவனை சைக்கிளில் கூட்டிச் செல்வதற்கு நான் தயங்கியதில்லை.
ஒரு நாள் இப்படித்தான் இஷாத் தொழுகையின் பின்னர் "அடேய் எனக்குத் தலவலியாக இருக்குது. நெஞ்சுக்குள்ளயும் ஏதோ அடைக்கிற மாதிரி வௌங்குது" என்றான்.
"என்ன செய்ய வேண்டும்? ஹொஸ்பிட்டலுக்கு போவோமா?" என்றேன்.
"ஆம்" என்றான்.
வைத்தியரிடம் சென்றபோது அவனைப் பரிசோதித்து விட்டு "உங்களுக்கு ஒரு நோயுமில்லை. டென்ஷன் கொஞ்சம் வந்திருக்குது, நான் ஒரு பாணி தாரன். அத குடிங்க. இந்த மருந்துகளையும் குடிங்க." என்றுவிட்டு 500 ரூபாவை கழட்டிக் கொண்டார்.



சில நாட்கள் சென்றபின்னர் ஹன்பலுக்கு வைத்தியர் டென்ஷன் பாணி கொடுத்ததை நண்பர்களிடம் சொல்லிவிட்டேன். அவனை பரிகசித்து தள்ளிவிட்டார்கள்.



( iii )

ஹன்பல் தனக்கு எந்தவொரு பிரச்சினை வந்தாலும் என்னிடம் தான் வந்து செல்வான். அதேவேளை எமது தஃவா செயற்பாடுகளில் நாம் இருவரும் மிக ஒற்றுமையாக செயற்பட்டோம். எமது சகோதரர்களின் விடயங்களை அவதானித்து வந்தோம். யாருக்கேனும் பிரச்சினை என்று தெரிந்தால் அவன் என்னிடம் சொல்வான். நானும் அவ்வாறுதான். குறித்த பிரச்சினைக்கு எப்படியேனும் தீர்வுகாண முயற்சிப்போம். சிலவேளை எல்லோரும் உறங்கிவிட்ட இரவுகளில் அவனது கட்டிலில் உட்கார்ந்துக் கொண்டு இரகசியமாக பேசுவோம்.



இப்படியான ஒரு காலப் பிரிவில் ஒரு முக்கியமான பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது. அந்தப் பிரச்சினையை அவன் தான் அவதானித்துவிட்டு என்னிடம் வந்து சொன்னான். நாமிருவரும் அந்தப் பிரச்சினையில் தொடர்புபட்ட சகோதரனை பாதுகாக்க வேண்டுமென்பதற்காக மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி கலைமானிப் பரீட்சையின் முதற்கலைத் தேர்விற்கு தயாராக வேண்டியிருந்தது.



ஹன்பலைப் பற்றி மிக நன்கு தெரிந்து வைத்திருந்ததால் அவனுடன் பரீட்சைக்காலத்தில் இது போன்ற விடயங்களை பேசினால் படிப்பதில் கவனம் செலுத்த மாட்டான். அதனால் இந்த விடயத்தில் நான் அவனை அலட்டவில்லை.



இச்சந்தர்ப்பத்தில் குறித்த பிரச்சினையில் மூன்றாவதாக முஷ்ரிப் நுழைந்தபோதுதான் இன்னுமொரு பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. உண்மையில் நான் ஹன்பல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே அவனிடம் பிரச்சினை சம்பந்தமாக எதுவும் பேசவில்லை. ஆனால், நான் அவனை வெட்டிவிட்டு முஷ்ரிபுடன் சேர்ந்து கொண்டதாக அவன் நினைத் திருக்க வேண்டும். அது பிரச்சினைக்கு புள்ளியை வைத்தது.



இந்த முறுகல் நிலையிலேயே புதிதாக இன்னொரு அபாயகரமான பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது. ஹன்பல் என்னுடன் தொடர்பற்று போனபோது இலாஹியுடன் நெருங்கிப் பழகினான். ஆனால், அந்தத் தொடர்பு நீடிக்காது என்பதை நான் நன்கு அறிந்து வைத்திருந்தேன். ஒருநாள் இலாஹி அதிர்ச்சியான ஒரு செய்தியை என்னிடம் சொன்னான். அது ஹன்பலுடன் ஏற்பட்ட பிரச்சினை. அதில் எனக்கும் ரிஷானுக்கும் மத்தியஸ்தம் வகிக்குமாறும் கேட்டுக் கொண்டான்.



நான் எவ்வளவுதான் மறுத்தபோதும் இலாஹி விடுவதாக இல்லை. அவன் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக நான் நம்பிவிட்டேன். முதற் கலைப் பரீட்சைக்கான திகதியும் நெருங்கியிருந்தது. எனவே, இந்தப் பிரச்சினை அவனது பரீட்சையை பாதிக்குமோ என்று பயந்தேன். பரீட்சையின் போது இலாஹியுடனே நான் திரிந்தேன். இதுவும் ஹன்பலை மிகவும் பாதித்திருக்கும் என்று நினைக்கிறேன்.



பரீட்சை முடிவடைந்ததன் பின்னர் நானும் ரிஷானும் ஹன்பலிடம் நடந்த விடயத்தைக் கேட்டோம். அவன் ஒற்றை வார்த்தையில் தவறை ஏற்றுக் கொண்டான். அது அவனது நல்ல பண்பு. இந்த விடயம் எம்மிடம் எஞ்சியிருந்த சில வார்த்தைகளையும் பறித்துக் கொண்டது.
நான் அந்த விடயத்தை நண்பர்க ளுக்கு முன் பல தடவைகள் ஹன்பலை நோவினைப் படுத்தும் வகையில் குத்திக்காட்டியிருக்கின்றேன். அதற்காக பின்வந்த பல நாட்களில் தனிமையில் வருந்தியுள்ளேன். சிலவேளை கண்ணீர்த்துளிகளும் கூட எட்டிப் பார்த்திருக்கின்றன.



( iv )

கிரிக்கெட் மைதானத்தில் கூட எமது முரண் வெளிப்பட்டது. அவன் எப்பொழுதும் எதிரணியிலேயே விளையாடுவான். நான் அவனிடம் அவதானித்த மிகச்சிறந்த பண்பு நிதானமாகும். ஆனால், நான் பந்து வீசும்போது நிதானத்தை இழந்து விடுவான். மிக வேகமாக அடிக்க முயற்சிப்பான். நானும் மிக வேகமாகவே பந்து வீசுவேன்.



இந்த மோதலில் இருவரும் மாறி மாறி வெற்றிப் பெறுவதுண்டு. ஒரு நாள் அவன் அடித்த பந்து மிக வேகமாக உயர எழுந்து வந்தபோது நான் அதை பிடியெடுக்க முயற்சித்தேன். அப்போது எனது சுட்டுவிரல் மடங்கி விட்டது. இப்போதுகளிலும் கூட அந்த மூட்டுக்களில் வலி ஏற்படுவ துண்டு.
இந்த நிலையிலே காலம் கடந்து கொண்டிருந்தது. விடுமுறையில் வீடு செல்லும் சந்தர்ப்பங்களில் தனிமையில் நிறையவே யோசிப்பேன். இந்த விடுமுறை முடிந்து வளாகம் சென்றவுடன் எப்படியும் பேசவேண்டும் என நினைத்துக் கொண்டு வருவேன். ஆனால், அது நடப்பதேயில்லை.



( v )

ஜவாத் ஒரு சஞ்சிகை வெளியிட்டான். அதற்கு வளாகத்தில் ஒரு வெளியீட்டு விழாவையும் நடத்தினோம். எதையேனும் செய்ய வேண்டும் என்ற வெறியில் இருந்த பருவத்தில் ஜவாதின் ஆலோசனைப்படி ஒரு சஞ்சிகையை நானும் தொடங்கலாம் என்று முடிவெடுத்தேன்.



அதன் துணை ஆசிரியராக அவனை செயற்படுமாறு வேண்டினேன். அவனுக்கு இலக்கியத்தில் ஆர்வமில்லை என்பது எனக்குத் தெரியும். என்னால் இதில் பங்களிக்க முடியாது என்று அவனும் தெளிவாகவே சொன்னான். என்றாலும் நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன் என்று பொறுப் பேற்றுக் கொண்டு அவனது பெயரையும் போட்டேன்.



ஆனால் சில இதழ்கள் வெளிவந்ததன் பின்னர் எனக்கு தனியாக செய்ய முடியாததை உணர்ந்தேன். அவன் ஒத்துழைப்புத் தராமல் இருப்பது எனக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. எனவே, அவனை துணை ஆசிரியர் பொறுப்பிலிருந்து சொல்லாமலே தூக்கிவிட்டேன்.



( vi )

வளாகத்திலிருந்து வெளியேறும் கடைசிநாள் வாழ்க்கையில் இறுதிக் கனம் வரை மங்கிப் போகாது. அந்த நாட்களில் ஒட்டோகிராஃப் எல்லாக் கல்லூரிகளிலும் பரந்து திரியும். எமது கல்லூரியிலும் அது நடந்தது. நானும் ஒரு ஒட்டோகிராஃபை எனது நண்பர்களிடம் வழங்கினேன். ஹன்பலும் ஒட்டோகிராஃப் வழங்கினான். அதில் என்ன எழுதினேன் என்பதை மறந்துவிட்டேன். ஆனால் மன்னிப்புக் கேட்டிருப்பேன் என்று நினைக்கின்றேன். அவன் என்னுடைய ஒட்டோவில் இப்படி எழுதியிருந்தான்.



unakku எழுதக் கூடாது என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் முடியவில்லை. நன்றாகப் பழகினோம். சஞ்சிகை செய்தோம். பிரிந்துவிட்டோம்...
காலத்தின் வெள்ளத்தில் எல்லாம் கரைந்து போயிற்று. இப்போது பிரியும் தருணத்தில் நானும் நீயும் நண்பர்களும்.
அவன் எழுதியது சந்தோசமாக இருந்தது. கடைசிவரியின் கவிதைத் தன்மையும் பிடித்திருந்தது.



( vii )

மிக நீண்ட நாளைக்குப் பிறகு ரிஸாதின் திருமணத்தின் போதும் எல்லோரும் சந்தித்தோம். ரிஸாதின் மாப்பிள்ளைத் தோழன் ஹன்பல்தான். மாப்பிள்ளை ரெடியாகிவிட் டான். ஹன்பல் சேர்ட் அயன் பண்ணியிருக்கவில்லை. ‘தாடா’ என்று கேட்டு நான்தான் அவனது சேர்ட்டை அயன்பண்ணிக் கொடுதேன்.




( viii )

திருமணம் முடிந்து விடைபெறும் நேரம் நான் ஹன்பலிடம் சென்று கைகொடுத்தேன். அவன் எனது கையை இறுக பிடிப்பது போல் விளங்கியது. முகத்தைப் பார்த்தேன். புன்னகைத்தான். எனது உதடுகளும் விரிந்தன. வார்த்தைகள் எதுவும் வெளிவரவில்லை. ஒரு ஓரமாக சென்றோம் எல்லா நண்பர்களும் ஊ அடித்து பரிகசித்தனர். நான் "நிறைய பேச வேண்டும்" என்றேன்.
அவன் "ம்"
"இன்டைக்குப் போகப் போறாயா?" என்றான்.
"போற ஐடியாவுலதான் இருந்தேன். நீ நிக்கிறியா?"
"சரி நிக்கிறேன். இவனுக உட மாட்டானுகடா"
"இவனுகள சமாளிக்கத் தெரியாதா?"
குண்டு ரிஸ்மி "அடேய் நேரமாவுதுடா போவோமா?" என்றான்.
நான் "இல்லடா நான் நின்டு வாரேன். நீ போ" என்றேன்.
எல்லோரும் ‘ஊ’ என்பது கேட்டது.



( ix )

நீங்கள் சந்தோசப்படுவது தெரி கின்றது. எல்லாக் கதைகளும் சந்தோசமாக முடியவேண்டும். என்றுதான் உள்ளம் நினைக்கும். ஆனால், யதார்த்தத்தில் அப்படி நடைபெறுவதில்லை. நீங்கள் ( viii ) என்று குறிப்பிடப்பட்டுள்ள பகுதியை வாசித்தவுடன் நிச்சயம் சந்தோசப்பட்டிருப்பீர்கள். ஆனால் அப்படியொன்றும் நடக்கவேயில்லை. எனது வலது கையின் சுட்டு விரலால் பேனை யைப் பிடித்து இன்னும் எழுதமுடியவில்லை வலிக்கிறது. நெஞ்சிலும்தான்.

Tuesday, August 12, 2008

வண்டிக்காரன்



மாட்டு வண்டியை வேகமாக செலுத்துவதில் வண்டிக்காரன் முனைப்பாக இருந்தான். மாடு கொஞ்சம் சலிக்கும் போது அதன் முதுகில் அவனது கையிலுள்ள சாட்டையால் இரண்டு அடி போடுவான். மாடு மீண்டும் வேகமாய் ஓடும். பின்னால் வண்டி இன்னும் அதிகமாக குலுங்கத் தொடங்கும். பயணிகள் எமக்கு அவசரமில்லாதபோதும் அவன் ஏன் இத்தனை அவசரம் காட்டுகிறான் என்று புரியவே இல்லை. பயணிகள் நாம் ஒவ்வொருவரும் முகங்களைப் பார்த்து விளித்தோம்.


பாதைகளிலுள்ள குழிகளில் வண்டியின் சக்கரங்கள் விழுந்து மேலெழும் போது எமது தலைகள் வண்டியின் கூறையில் பட்டு வலித்தன. வண்டிக்காரன் முன்னால் செல்கின்ற வண்டிகளை யெல்லாம் முந்திச் செல்வதில் அக்கறைக் காட்டினான். வீதியில் எதிரே வரும் வண்டிகள் பற்றியெல்லாம் அவன் கவலைப்படவில்லை. அந்த வண்டிக்காரர்கள் வண்டிகளை ஓரமாக்கி வழி விட்டனர். அவ்வண்டிகளின் மாடுகள் எங்களை முறைத்துப்பார்த்தன. சில வேளை ம்பே... எனக் கத்தின. இதையெல்லாம் எமது வண்டிக்காரன் கவனத் திலெடுப்பதே இல்லை. அவன் பாட்டில் ஓட்டிக் கொண்டே இருந்தான். எமக்கு நெஞ்சு திக் திக் என்றது. எமது பயணம் முடிந்திடுமா? அல்லது எமது இந்த வாழ்க்கைப் பயணமே முடிந்திடுமா என்ற அச்சம் அடிக்கடி வந்தது.



அப்போது இறைவன் ஒருவன்தான் என்று சாட்சி கூறுகின்றேன். அவன் தனித்தவன் அவனுக்கு நிகரேதுமில்லை... என்று மொழிந்துக் கொண்டேன். என் சகப்பயணிகளும் மொழிந்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

ஒரு இடத்தில் வண்டிக்காரன் மாட்டின் கயிற்றைப் பிடித்திழுத்து வண்டியை நிறுத்தினான். சில துருப்பிடித்திருந்த இரும்புப் பெட்டிகளைக் காட்டி, இது என்ன என்று தெரியுமா? என்று கேட்டான். நாங்கள் எதுவும் புரியாமல் விளித்தோம். ஏதோ டிப்போ என்று சில எழுத்துக்களைக் கொண்ட போர்ட் ஒன்று தொங்கியது.


பயணிகள் நாங்கள் எல்லோரும் இளைஞர்கள் என்பதால் எமக்குப் போதிய அறிவில்லை என்பதை அந்த முதிய வண்டிக்காரன் அந்தக் கேள்வியின் மூலம் எமக்குச் சொல்வது தெரிந்தது. எங்களுக்குத் தெரியாது, நீங்களே சொல்லுங்களேன் என்று சக பயணி ஒருவன் கேட்டான். இதற்கு பஸ் என்று சொல்வார்கள். சிலர் பேரூந்து என்று சொல்வார்கள். முன்னரெல்லாம் இந்த மாட்டுவண்டிகள் இல்லை. எல்லோரும் இதுபோன்ற பல வாகனங்களில் தான் பயணம் செய்வார்கள். சில வாகனங்களில் சில வெளியில் எவ்வளவு வெயில் அடித்தாலும் உள்ளே குளிராக இருக்கும். பஞ்சில் அமர்ந்திருப்பது போன்றிருக்கும். அது ஒரு காலம் என்றுவிட்டு வண்டிக்காரன் பெருமூச்சு விட்டான்.

இந்தப் பெட்டிகளை மாடுகளா இழுக்கும் என்று மற்றுமொரு பயணி கேட்டான்.இல்லப்பா, பெற்றோல்ன்டு ஒரு எண்ணெய் இருந்திச்சி அத ஊத்தித்தான் ஓட்டனும்...எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் எங்களை நன்றாக ஏமாற்றுகின்றான் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். ஆனால், வண்டிக்காரன் எங்களுக்கு கஷ்டப்பட்டு விளங்கப்படுத்த முயற்சித்தான். எங்களுக்கு விளங்கவேயில்லை. அவனுக்கு அது விளங்கிய போது நாங்கள் போவோம் என்று கூறி மாட்டின் முதுகின்மீது இரண்டு அடி அடித்தான். அப்போது திரும்பி நான் உங்களை மாதிரி பொடியன் காலத்துல பஸ் வண்டியைத்தான் ஓட்டினேன் என்று சொல்லிவிட்டு மீண்டும் மாட்டை விரட்டத் தொடங்கினான். அன்று 2062.10.28 ஆம் திகதியாகும். இன்னும் ஒரு வாரத்தில் எனக்கு 18 ஆவது பிறந்தநாள்.

Monday, July 14, 2008

சிங்கராஜவனம்


எங்கட வூட்டுல அண்டைக்கு சொந்தக்காரங்கள் எல்லாரும் வந்திருந்ததால கொஞ்சம் கலக்கலப்பா இருந்திச்சி. சின்னவன்கள்ட அட்டகாசத்த தாங்க முடியல. எல்லோரும் ஐந்து முதல் பத்து வயதிற்கு உட்பட்டவர்கள். ஒரே ரூமில் இருந்துகொண்டு கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அவங்களுகிட்டப் போய் உட்கார்ந்துகொண்டேன்.

“மாமா இவனப் பாருங்களே,”

“சாச்சா இதப் பாருங்களே”

என முறைப்பாடுகள் நிறையவே வந்துகொண்டிருந்ன.


“நானொரு கதை சொல்லவா”ன்டு கேட்டேன். எல்லோரும்

“ஆங் சொல்லுங்கென்டு” வட்டமாக உட்கார்ந்து கொண்டார்கள்.

இப்ப என்ன செய்வது கத ஒன்று சொல்ல வேணுமே. யோசித்தபோது காகமும் வடையும் கதை ஞாபகம் வந்தது.

“உங்களுக்கு காகமும் வடையும் கத தெரியுமா?”

“ஐயோ மாமா! அது எல்லாருக்கும் தெரியும்.”

“அப்ப முயலும் ஆமையும் கத”

“அதுவும் தெரியும்.”

“அப்படீண்டா எனக்கு ஒரு கதயும் தெரியாது” என்று சொல்லி தப்பப் பாத்தேன். விடுவான்களா? எல்லாரும் ஒன்டா சேர்ந்து

“சொல்லுங்க மாமா, சாச்சா ன்டு” கத்தத் தொடங்கிவிட்டான்கள்.

“சரி சரி சொல்றேன் சத்தம் போடாதீங்க.” எப்படியும் இப்ப கதயொன்ற சொல்லனுமே.


“ஒரு நாடு இருந்தது. இல்ல இல்ல, ஒரு காடு இருக்கின்றது. அங்கு சிங்கங்கள்தான் ஆட்சி செய்துகொண்டிருந்திச்சி. ஆனால், ஆனை, புலி, மொசல், எலி, நரி, மாடு எல்லாமும் அங்கு இருக்குது. கொஞ்ச காலத்துக்கு முந்தி ஆனைகள்தான் ஆட்சி செஞ்சிச்சி. ஆனா, இப்ப சிங்க ஆட்சிதான்.”


“ராஜா பேரென்னா மாமா?” என்று என்ட தாத்தாட மகன் கேட்டான்.

“ராஜாட பேரு ராஜாதான். அவனுக்கு மூன்டு நாநா, தம்பிமார். மூத்தவன்ட பேரு சாம்பல். மத்தரெண்டு பேரும் தம்பிமார். அவன்கள்ட ஒத்தன்ட பேரு கோப்பை. இவன் பொல்லாதவன். முந்திக் காலத்தில சிங்கப் படையிலும் வேலை செஞ்சிருக்கான். ரெண்டாவது தம்பி விசில். இவன் டிரபிக் பொலிஸ்காரன்போல நெறையப் பேர புடிச்சி வைச்சிட்டிருக்கான். ராஜாக்கு மூன்று சிங்கக் குட்டிகளும் இருக்குது. அதுகளும் ராஜா ரெண்டடி பாஞ்சா ஆறடி பாயுங்க. இந்தக் காட்டுல இருவது வருசத்துக்கு மேலா புலிகள் எதையாவது செய்துகொண்டே இருக்குதுகள்.”


“புலி சிங்கங்கள கொல்லுமா மாமா?”

“ம்ம்... புலிகள் நெறைய பெரிய சிங்கங்களையே கொண்டிருக்குது. ஒரு தடவ ராணிய கொல்லப்பார்திச்சி. ஆனா ராணிட கண் மட்டும்தான் பொட்டயாச்சி. ராணி தப்பிறிச்சி.”

“காட்டுல ஆட்சிய புடிக்கிறத்துல சிங்கத்துக்கும் ஆனைக்கும் ஒரே போட்டிதான். இப்ப ரெண்டு மூன்று வருசமா காண்டா மிருகங்களும் ஆட்சிய புடிக்க தடுமாறுதுக.”

“காண்டா மிருகங்கள் நெறைய இருக்குதா மாமா?”


“இருந்திச்சிதான். அதுகல ஆனைகள் கொன்டுபோட்டிச்சி. அதுக்குப் பொறகு அதுகள் சிங்கத்தோடு சேர்ந்துகொண்டிச்சி. ஆனா, சிங்கத்திட ராஜா அதுட தம்பி கோப்ப, விசிலும் சேர்ந்து காண்டாமிருகக் கூட்டத்த ரெண்டா பிரிச்சி போட்டிச்சுகள். இப்ப ஒரு கூட்டம் சிங்க ராஜாவோட கோவத்துல இருக்குதுகள். மத்தக் கூட்டம் சிங்க ராஜாக்கு சப்போட் பண்ணிக்கொண்டு இருக்குதுகள்.”


“காண்டாமிருகங்கள் சிங்கங்கள கொல்லலையா சாச்சா?”

“இல்ல, காட்டுல சிங்கங்கள்தான் கூடுதலா இருந்திச்சி. இந்த சிங்கங்கள் புலிகள இறைச்சி தின்ற மிருகங்களா கணக்கெடுக்கள. புலிகளும் லேசிப்பட்டதில்ல. எங்களுக்கு காட்டுல ஒரு பகுதி வேணும்டு கேட்டிச்சிகள். சிங்கங்கள் குடுக்குமா?”

“இல்ல மாமா.”


“அதுக்குப் பொறகு மிச்சம் பிரச்சினகள் வந்திச்சி. புலிகளும் சிங்கங்களும் பேசிப் பார்த்திச்சி. ஓநாய், நரி, குதிரை எல்லாம் பேசி பாத்திச்சி. ஆனா, எதுவும் சரிவரல்ல.”

எல்லோரும் அமைதியாக இருப்பது என்னவோ என நினைத்து தாத்தா, தங்கச்சி, மைனி, நானா எல்லாரும் வந்து பாத்துட்டு, பாத்துட்டு போனாங்க, நான் கண்ணைக் காட்டி அனுப்பிவிட்டேன். இடையில் உம்மா

“சாப்பாடு போடவா”ண்டு கேட்டா?

“சொனங்கிப் போடுங்க உம்மம்மா”ன்டு எல்லோரும் சொன்னான்கள்.


“ஒரு நாள் புலிகள்ட ஒரு கூட்டம் சிங்கத்துட பத்து பணெண்டு பேர கொன்டுபோட்டிச்சுகள். அதனால கோபமடைந்த சிங்கங்கள் புலிகள காட்டுக்குப் போய் நெருப்பு வைச்சிச்சு. புலிகள் சிலத அந்த நெருப்புல தூக்கிப் போட்டிச்சி. முயல்களெல்லாம் நடுங்கிப்போச்சி. அதுக்குப் பொறகுதான் ரெண்டு கூட்டத்துக்கும் சண்ட ஆரம்பிச்சிச்சி.”


“இப்பயும் அந்தக் காட்டுல புலிகளும் சிங்கங்களும் சண்ட புடிக்குதுகளா மாமா?”

“ம்ம்... இன்னும் ராஜா, கோப்ப, விசில் எல்லாரும் சேர்ந்து புலிகள் எல்லாத்தையும் கொன்டுடுவோம் என்றுசொல்லி அழிச்சிக்கொண்டு இருக்குதுகள்.”

“அப்ப புலிகள் சும்மா இருக்குமா மாமா?”

“இல்ல. புலிகளும் சிங்கங்கள கொல்லுதுகள்.”

“மான்களுக்கும் முயல்களுக்கும் சிங்கத்தப்போல புலிகளப் போல சண்ட புடிக்க ஏலாதுதானே.”

“ம்ம்.. சண்ட புடிக்க ஏலாம மான்களும், மொசல்களும் சிங்கத்தோட கொஞ்சம் பேரும் புலிகளோட கொஞ்சம் பேரும் சேர்ந்து கிட்டிருக்கிதுகள்.”


“மாமா, இந்த ராஜா சிங்கத்துக்கு கொஞ்சமாவது இரக்கமில்லையா?”

“அதுகிட்ட கொஞ்சமும் இரக்கமில்ல. ஆனால் இரக்கம்போல நல்லா நடிக்கும். மொசல் குட்டிகள்ட தலைய தடவி உடும். மோந்துகொல்லும். கொஞ்சம் மொசல்கள் இதெல்லாம் நம்புறதும்தான்.”

“மாமா புலிகளும் சிங்கங்களும் சாவுறது நல்லம்தான். ஆனா, மொசல்களும் மான்களும் பாவமில்லையா?”எனக்கு ஒரு கோல் வந்திச்சி. இதுதான் சந்தர்ப்பமென்று எழும்பி வந்துவிட்டேன்.
20080706

Tuesday, June 17, 2008


நீதம்


மூலம் - நஜீப் அல் கைலானி


நான் அவர்களுக்குச் சொன்னேன் 'எனக்கு ஆயுதங்களைப் பற்றி ஒன்றும் தெரியாது' அதனை உண்மையோடும், உறுதியோடும்தான் சொன்னேன். என்னுடைய வீக்கங்களும், கண்ணீர்த் துளிகளும் அதனை மேலும் உறுதிப்படுத்தின. அல்லாஹ் மீதும் சத்தியம் செய்தேன். கோபமான அவர்களுடைய பார்வைகள் என்மீது படிந்திருந்தன. வேதனை ஏற்படுத்தக் கூடிய சாட்டைகள் அவர்களின் கைகளில் இருந்தன. அவர்களுடைய முகங்களும் கூட இறுகி கடுமையாகி இருந்தன. அதாவது அவர்கள் யாரையுமே நம்பமாட்டார்கள்... நான் என்ன செய்வேன்?
மீண்டும் ஒரு தடவை சாட்டை என் நிர்வாண உடலைத் தாக்கியது. எனது உடல் பயங்கர வேதனைகளையெல்லாம் நன்றாக உணர்ந்தது. தாங்கும் சக்தியும் ஓரளவுதானே இருக்கின்றது... அவர்கள் எனது நகங்களில் ஒன்றைக் கழற்றியபோது என்னைச் சூழவும் கடும் இருள் சூழந்திருப்பது போலிருந்தது... அருவருக்கத்தக்க வேதனைகள் என் உணர்வுகளை இழக்கச் செய்துவிட்டன. கொஞ்சம் நடந்தேன்.
அவர்கள் இன்னுமொரு நகத்தைப் பிடுங்வதற்காக வந்துகொண்டிருக்கிறார்கள். அதனை செய்பவன் அவனுடைய தொழிலை நன்றாகச் செய்கின்றான். அவனுடைய முகத்திலே ஒரு தசையேனும் துடிக்கவில்லை. நான் உதவி வேண்டி கூச்சலிட்டேன். "ஹராம் மனிதர்களே" ஷைத்தான் பரிகாசமாக புன்னகைத்தான். "நாங்கள் ஹலாலையும், ஹராத்தையும் உன்னைவிட நன்றாக அறிவோம். நீதான் உன்னை வேதனைப்படுத்திக் கொள்கின்றாய். நாங்கள் மரணம் வரை இதனைச் செய்து கொண்டிருப்போம்... மரணம்.... அப்போது உன்னை ஒரு குப்பை வண்டி சுமந்து செல்லும். அது பாலை வனத்திலுள்ள ஆழமான குழியொன்றில் உன்னைப் போட்டுவிடும். இதுதான் நீ அது எங்கு இருக்கின்றது என்று சொல்லாவிட்டால் நடக்கும்."
எனது கண்கள் உறங்கி மூன்று நாட்களாகின்றன. எனது வாப்பா வீட்டில் முன்னாலுள்ள பெரிய மரமொன்றின் நிழலிலிருந்து சிகரட் புகைத்துக் கொண்டிருப்பார். என் உம்மா எந்த சந்தேகமுமில்லை. கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு வீட்டின் உள் அறையில் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பாள். எனது தங்கை அவளது 'பிளாஸ்டிக்' பொம்மையான 'ஹனா'வோடு மழலை மொழியில் பேசிக் கொண்டிருப்பாள். எமது ஏழைக் கிராமம் கடந்த 1000 வருடங்களைப் போலவே பொறுமையாக அமைதியாக அதனது வேலைகளை செய்துகொண்டிருக்கும். நான் இங்கு அல்கோஸ்களை (தூக்கிலிடுபவர்) சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
எனக்கு ஆயுதங்கள் பற்றி ஒன்றும் தெரியாது. என் மீதுள்ள எல்லாக் குற்றமும் பாடசாலைக் கால பழைய நண்பன் இப்போது குற்றவாளி என்பதாகும். அவனது பெயர் அப்துல்லாஹ்".வேதனையோடும் துன்பத்தோடும் சில மணித்தியாலங்கள் கடந்தன. அவை ஒரு வருடம் போன்றிருந்தது. பொதுமக்கள் துன்பங்களைச் சகித்துக் கொள்வது பற்றி, அர்ப்பணம் பற்றி, வீரம் பற்றி பத்திரிகைகளில் மிம்பர்களில், பேசித் தள்ளுகிறார்கள். எல்லாவற்றையும் இப்போது நான் நினைத்துப் பார்கின்றேன்.
என்னை நான் பார்க்கின்றேன். எதைக் காண்கின்றேன்? நம்பிக்கையீனத்தினதும், சிதைவுகளினதும், சிந்தனை சிக்கல்களினதும் குவியல்... வானத்தைப் பார்கின்றேன். ஆ... வானமில்லை. ஏனெனில் கூரை கறுப்பு நிறமாயிருந்தது. ஜன்னல்கள் மூடப்பட்டிருந்தன. கதவு தண்டவாள இரும்பினாலானது. அதற்கு மேல் கறுத்த திரையொன்றை போட்டிருந்தார்கள். நான் உயிரோடிருப்பது சாத்தியமில்லை. அது எனக்கு விளங்குகின்றது. என்னை மரணம் பீடித்து விட்டதா? நானிப்போது கப்ரின் வேதனையிலிருந்து விடுதலை பெறுகின்றேனா? நல்லவர்கள் இவற்றைப் பார்த்து சிரிப்பார்கள். ஏனெனில் அவர்கள் 20ம் நூற்றாண்டின் நாகரீகம், அபிவிருத்தி, மனிதனின் ஆரம்பம் பற்றி அதிகம் வாசிக்கிறார்கள். நான் நேற்றிலிருக்கின்றேன். அவர்களைப் போன்று இந்த ஆய்வு ஒரு பெரிய அடியை அடித்தது.
நான் மெதுவாக இன்னொரு பக்கத்திற்கு நடந்தேன். உண்மையின் பக்கம்... நான் ஏன் இவர்களை ஏமாற்ற வேண்டும். பெரிய எண்ணங்கள் என் மனதில் இருக்கின்றன. இறந்துவிடலாம்.நான் தப்பித்து விட்டால்... ஆஹ் நான் எனக்காகவே வாழ்வேன். யாரோடும் நட்புக் கொள்ள மாட்டேன். நான் நான்... சாட்டையும் பிடுங்கப்பட்ட நகங்களும், அல்கோஸ்களின் இழிவான வார்த்தைகளும் முப்பது வருடமாக நான் கற்ற, எனது உள்ளத்திலிருந்த அனைத்தையும் சிதைத்துவிட்டது. மூன்று நாட்களில் எனது உள்ளத்திலிருந்த நல்ல வாசகங்கள் அழிந்துவிட்டன. இதற்குமேல் எந்தவொரு வேதனையையும் தாங்க முடியாது என்பதை உணர்ந்தேன். எனது அனைத்து சக்திகளும் விழுந்துவிட்டன. நான் மிருகத்தை விடவும் மிகவும் பலவீனமாகிவிட்டேன். எல்லாவற்றையும் அல்கோஸ்களிடம் தொலைத்துவிட்டேன். இடது கையின் ஆறாவது விரலைப் பிடுங்குவதற்காக ஷைத்தான் நெருங்கிய போது கெஞ்சலாக கத்தினேன்.
"எனக்கு இரக்கம் காட்டுங்க"
நான் உடன்படாதவற்றை அவன் மென்மையாகச் சொன்னான்.
"மகனே நீ ஏன் உன் மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்ளக் கூடாது. அப்துல்லாஹ்விடம் ஆயுதங்கள் இருக்கின்றன. எங்களுடைய விசாரணைகள் அதனை உறுதிப்படுத்துகின்றன. நீ மட்டும்தான் அதனை சொல்வதற்குரிய ஒரேயாள்"
"எனக்குத் தெரியாது" என்றேன்.
எனது வார்த்தைகளை கண்ணீர்த்துளிகள் முந்திக் கொண்டன. அவனுடைய முகம் கறுத்தது. என்னுடைய கையை இழுத்து ஆறாம் விரல் நகத்தைக் கழற்றினான். அருவருக்கத்தக்க வேதனை... இரத்தம்... மரணம் மீதான பயம்... நம்பிக்கையீனம் எனது தலை சுற்றியது. பல காட்சி கலந்தன. ஒநாய்கள், நரிகள், காட்டு மிருகங்கள் நிறைந்த பிரமாண்டமான காடு. இரத்தம் தோய்ந்த பற்கள்... நகங்கள், முட்கள், இருள், பயம் என் உதடுகள் சில வார்த்தைகளை முணுமுணுத்தன.
"அப்துல்லாஹ்விடம் ஆயுதங்கள் இருக்கின்றன"
சிரிப்புக்களால் இவ்விடம் நிறைந்தது. நான் பேசுவதற்கு முயன்றேன். தொண்டைக்குள் வார்த்தைகள் அடைத்துக் கொண்டன. பின்னர் கஷ்டப்பட்டு பேசினேன். சில வார்த்தைகளை கூச்சலுக்கும், பரிகாஷங்களுக்கும், சிரிப்புக்களுக்குமிடையிலே பேசினேன். அல்கோஸ்கள் பேசிக் கொண்டனர்.
"மனிதர்களில் இந்த வகையினரை எனக்குத் தெரியும். மரணத்தின் விளிம்பில்தான் ஏற்றுக் கொள்வார்கள். அவர்களின் கண்ணீர்த்துளிகள் எப்போதும் பொய்யானவை. அவர்களது சத்தியங்களனைத்தும் பொய்யானது மிருகங்கள்!"
"கைகளிரண்டையும் கழற்றினாலும் பொறுமையாயிருப்பார்கள் என்ன மனிதர்கள்"
அவர்கள் என்னை மீண்டும் அறைக்கு கொண்டு வந்து வீசி எறிந்தார்கள். நான் தொடர்ந்தும் வேதனையை உணர்ந்தேன். எனக்கு தூக்கமாக இருந்தது. நான் இன்னும் சில நேரம் இருப்பேனா?" அஞ்சிக் கொண்டும், இறைஞ்சிக் கொண்டும் எழுந்தேன். இது அப்துல்லாஹ்வின் குரல். எனக்கு நன்கு பிரித்தறிய முடியும். என்னிதயம் பயத்தால் அடித்துக் கொண்டது. நான் எழுந்து நின்றேன். எனது உடம்பு முழுவதும் நடுங்கியது. நான் வேதனையை உணர்ந்தேன். சில வினாடிகளில் சிறைக்காவலன் வந்து
"உனக்கு ஏதும் தேவையா"என்றான்.
நான் பதிலளிக்காதபோது அவன் தனது தலையை சாய்த்து
"அப்துல்லாஹ் ஒரு கஞ்சன். அவன் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றான். உன்னைப் பொறுத்தவரையில் நீ தப்பித்து விட்டாய். நீ அறிவுள்ளவன். அப்துல்லாஹ் ஏற்றுக் கொள்ளாவிட்டால் இறந்திடுவான்."
நான் பைத்தியம் போல கத்தினேன்.
"இல்லை அப்துல்லாஹ் அநியாயம் செய்யப்பட்டவன்"
"நீ அவனுக்குப் பதிலாக ஏற்றுக்கொள்கிறாயா?"
"இல்லை நான் ஏற்றுக் கொள்ளவில்லை"
"நடுங்கிக் கொண்டிருந்த இரண்டு கைகளிலும் பிடுங்கப்பட்ட நகங்களைப் பார்த்தேன். பின்னர் சிறைக் காவலனைப் பார்த்து கவலையோடு
"நானும் உங்களைப் போன்று அல்கோஸ்தான். நான் பொய்யன்... பொய்யன்... பொய்யன்... எனது முகத்தில் விழுந்த பலமான அடி எதிரொலித்தது.கோபமாயிருந்த சிறைக் காவலனைப் பார்த்தேன். அவனது கண்கள் எரிந்தன. அவனுடைய உதடுகள் துடித்தன. அவன் சொல்வதைக் கேட்டேன்."நீங்கள் எங்களை பரிகஷிக்கின்றீர்களா?"
முகத்தின் மீது கையை வைத்துக் கொண்டு அலறியவனாக
"அப்துல்லாஹ் அநியாயம் செய்யப்பட்டவன். நான் என்னுடைய வேதனையிலிருந்து தப்புவதற்கே சொன்னேன்." என்றேன்.அவன் இழிவாக கேட்டான்.
"நீ உன்னை வீரனென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்." "இல்லை நான் அதைச் சொல்லவில்லை. நான் தியாகி.. நான் யாருக்கும் தீங்கிழைக்கவில்லை. என்ட வாழ்க்கை முழுவதும் எந்தப் பாவமும் செய்ததில்லை. அல்லாஹ்வுக்கு தெரியும் என்ட ஊர் மக்களுக்குத் தெரியும்."
அவன் வயிற்றில் உதைத்துக் கொண்டே கத்தினான்.
"உண்ட வாப்பா நாசமாப் போகட்டும். உன்ட ஊர் நாசமாப் போகட்டும்.என் வயிற்றில் எற்பட்ட வேதனையை தாங்க முடியாமல்
"என்னை இராணுவத்தினரிடம் கூட்டிச் செல்லுங்கள். நான் உண்மையைச் சொல்ல விரும்புகின்றேன்" என்றேன்.
"எமக்கு உன்னிடம் சில தேவைகள் இருக்கின்றன. நீ ஏற்றுக் கொண்டதையும், உன் கையெழுத்தையும் எடுக்க வேண்டியிருக்கின்றது. இன்றைய பத்திரிகைகள் எழுதியிருந்தவற்றை நீ பார்க்கல்லையா? பார்... இது உன்னுடையதும் அப்துல்லாஹ்வினதும் Photos. நீ ஏற்றுக் கொண்டது இதற்கு மேல் என்ன? நீ எங்களை அதிகாரிகளிடமும், மக்களிடமும் சிக்க வைக்க பார்க்கின்றாயா?"
அவன் பின்னால் கதவைத் திறந்து திரும்பினான். பயங்கர அமைதி நிலவியது. எனது தலையை சுவரில் அடித்துக் கொண்டேன். கொஞ்சமேனும் இரக்கமும், மனிதாபிமானமும் இல்லை. அவர்களின் இரும்புக் கதவு... அல்கோஸ்களின் பார்வைகள், இறுகிய முகங்கள்... புதுமையான அன்பை அறியாத... அல்லாஹ் அறிவான். திரைச் சீலையிலிருந்த சிறிய துளையினூடே பார்த்தேன். சிறைச்சாலை வைத்தியர் ஓடுகின்றார். என்ன நடந்தது? வழமைபோல யாராவது ஒரு அல்கோஸ் அடித்திருப்பான். எனினும் நான் அப்துல்லாஹ்வின் குரலை கேட்கவில்லை. கொஞ்ச நேரத்தின் பின் போன வழியிலே வைத்தியர் திரும்பி வந்தார். பின்னர் சிறிய சக்கரங்களையுடைய மேசையொன்றின் மீது அது வைக்கப்பட்டிந்தது அந்தச் சக்கரங்கள் வேதனையால் முணங்குவது போன்று கீச்சொலியை ஏற்படுத்தின. மெல்லிய வெளிச்சமுடைய சிறைக் கூடத்திலிருந்து நான்கு அல்கோஸ்கள் நெருங்கி வந்தனர். அவர்களில் ஒருவன்
"அப்துல்லாஹ் ஏற்றுக் கொள்ளவில்லை என்றான்.
இரண்டாமவன் "ஆயுதம் எங்கே"என்றான்.
நான் நடுங்கிக் கொண்டே "உங்களின் சிந்தனையில்தான் ஆயுதம் இருக்pன்றது" என்றேன்.
டேய் மகனே ஏனடா அவனிடம் இருக்கிறதா ஒத்துக்கிட்ட?"
நான் ஹிஸ்டீரியா பிடித்தவன் போல சிரித்தேன்.
"நீங்கள் அதனை விரும்பினீர்கள் நான் எவ்வித உணர்வுமின்றி நடித்தேன்"
அவர்களில் ஒருவன் கண்சிமிட்டியவாறு
"அவன் இறந்துவிட்டான்" என்றான்.
நான் பைத்தியம்போல் மாறினேன். எல்லாத்திக்கிலும் அடித்தேன். காடு,.. மிருகங்கள்.. இரத்தம் தோய்ந்த பற்கள்.. நான் அடித்துக் கொண்டிருந்தேன். சில நிமிடங்களில் அவர்கள் என்னை பிடித்துக் கொண்டார்கள். அவர்களின் தலைவன் சொன்னான்.
"நாங்க உண்மையைத்தான் விரும்புகின்றோம்."
நான் சாட்டைகளையும், நகங்கள் பிடுங்கிய கருவிகளையும் பார்த்தேன். பின் முணுமுணுத்தேன்.
"உண்மை?"அவர்களின் தலைவன் எந்தவித அதிகாரமுமின்றி சொன்னான்.
"ஆயுதமுமில்லை. ஒரு மரக்கட்டையுமில்லை.
"நான் அதையே தொடர்ந்து சொன்னேன்.
குறிப்பு: "இந்தக் கிறுக்கல்களை ஏதோ ஒரு நகரில்... ஏதோவொரு நாட்டில் நவீன காலத்தில்... 20 (21)ம் நூற்றாண்டில்... அறிவு சிவில் உலகில் உள்ள மனநோய் வைத்தியசாலையில் பதிவுசெய்தேன்.

(முற்றிற்று)


தமிழில்: பாஸிரா மைந்தன்


நன்றி -வைகறை இதழ் 02

இந்த சில நாட்களாய்...



மிக அவசரமாக செல்ல வேண்டியிருந்தாலும் மேகங்களுக்கிடையே மெதுவாக மறைய முனைந்த நிலாவின் பாதித்தோற்றத்தை,அதன் ஒளிப்பரவலின் சிதறலை ரசிக்காதிருக்க முடியவில்லை.சைக்கிலும் கூட வேகமாக செல்ல மறுத்தது. சற்றுத்தாமதமாகவே வீட்டை அடைந்தபோது வராந்தை கதிரையில் அஹ்மத் அமர்ந்திருந்தான்.
வீடு மிக அமைதியாக இருந்தது. இந்த சில நாட்களாய் இப்படித்தான். வாசலில் என் சத்தம் கேட்டதுமே ஓடி வரும் மூத்த மகள் அஸ்பாவையும் காணவில்லை. சிறியவன் அம்ஜத் நுளம்பு வலைக்குள் குப்புறப் படுத்திருந்தான். வலையை விலக்கிவிட்டு நெற்றியில் ஆழமாக முத்தமிட்டுவிட்டு மகளிடம் சென்றேன். அவளை தொட்டபோது உடம்பின் சூடு நன்றாகவே விளங்கியது. மெதுவாக கண் திறந்தாள்.
“என்னம்மா” என்றேன்.
“காய்ச்சலடிக்குது வாப்பா” என்றாள்.
கடுமையான வேதனைபோலும்.அவளையும் மீறி கண்ணீர் பிரவகித்தது.“மருந்து குடிச்சீங்களா?” என்றேன்.
“ம்..உம்மா தந்திச்சி..கொத்தமல்லி ஆவிபிடிக்க கொதிக்க வைச்சிருக்குது.”அவளை அப்படியே தூக்கிச்சென்று கட்டிலில் படுக்க வைத்தேன்.தலைக்கு சிறிய தலகானியை வைத்துவிட்டு சமையலறைக்கு நகர்ந்தேன்.
என் மனைவி ஹுஸ்னா சமையலில் மும்முரமாக இருந்தாள்.நீங்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை.அவளது சமையல் எளிமையாக இருந்தாலும் ருசியாகத்தான் இருக்கும்.அவள் என்னைக் கண்டுக்கொண்டதாக காட்டிக்கொள்ளவேயில்லை. இந்த சில நாட்களாய் இப்படித்தான்.
flask இலிருந்த தேனீரை எனக்கும் அஹ்மதுக்குமாக எடுத்துக்கொண்டு வராந்தைக்கு சென்றேன்.இந்த இடைவெளியில் அழுதிருப்பான் போலும்.
“என்னடா அழுதியா?” என்றேன்.
“அவளும் நீயும்தான் எனக்குள்ள ஆறுதல்கள்.ஆனால் அவள்… .”
“ஏன்டா அப்படிப் பேசுற.நேற்று நான் அவளைக் கண்டேன்.நன்றாகத்தானே பேசினாள்.நீதான் அவளைப் புரிந்துக்கொள்ளவில்லையா?”
“இல்லடா பழசை மறந்து நேற்று officeசெல்லும்போது சொல்லிவிட்டு சென்றேன்.ஆனால் அவள் என்னை இந்த திருமணம் முடித்த ஆறு மாதங்களுக்குள் நடந்துக்கொள்வதுப்போல அங்கீகரிக்கவில்லை”
“இந்ந நேரத்தில நீ ஏன் வந்த?அவள் வீட்ல தனியாகத்தானே இருப்பாள்?”
“இல்லடா இன்டைக்கு மாமி வந்திருக்காங்க.”
“அவங்களுக்குத் தெரியுமா?”
“அவங்களுக்கு அதுக்கு நேரமில்லடா.”
“நீ அவளோட தெளிவா பேசினியா?உனக்கு எத்தனை தடவை சொன்னேன்.”
“பேசத்தான் நினைக்கிற,ஆனா பேச ஏலாம இருக்குது.ஏன்டா எனக்கு இப்படி சோதனை வருது?இத்தனை நாள் கஸ்டப்பட்டுவிட்டு சந்தோஸமாக வாழலாம் என நினைத்தால்…”அவனால் பேச முடியவில்லை.
பாடசாலைக் காலத்திலிருந்தே என் நெருங்கிய நண்பன்.மிகவும் மெல்லிய மனது.7 மாதங்களுக்கு முன்புதான் சீனாவின் பெயின்ட் தொழிற்சாலை ஒன்றில் வேலைசெய்தவிட்டு, இலங்கை கிளைக்கு மாற்றல் பெற்று வந்தான்.வந்து ஒரு மாதத்திலே காத்திருந்த பாடசாலைத் தோழியை மணந்துக்கொண்டான்.
சமையல் அறையிலே ஏதோ விழும் சத்தம் கெட்டது.பதறிப் போனேன்.உள்ளே ஹுஸ்னா சஞ்சலமின்றி இருந்தாள்.மேசையில் சாப்பாடு வைக்கப்பட்டிருந்தது.அது ஒரு சமிக்ஞையாக இருந்திருக்கும்.இந்த சில நாட்களாய் இப்படித்தான்.
நீண்ட நாளைக்கு பிறகு அஹ்மதும் உட்கார்ந்து சாப்பிட்டது சந்தோஷமாக இருந்தது. நான் உரையாடலை தொடர்ந்தேன்.
“ஏன் அப்படி நடந்துக் கொள்கிறாள். நீ என்னமாவது செய்திருப்பாய்.”
“ம்…மூன்று நாளைக்கு முன்பு வேலைக்கு போக உடுப்பு ஒன்றையும் கழுவிப்போடடிருக்கவில்லை.கொஞ்சம் கடுமையாகவே ஏசிவிட்டேன்.பிறகுதான் ஞாபகம் வந்தது அவள் கையில் சுடுத்தண்ணி ஊத்துப்பட்டு எரிகாயம் ஏற்பட்டிருந்தது.”
“நீ sorryசொன்னியா?”
“இல்லடா.”
“நீ sorry சொல்லி அப்பவே இரக்கமாக பேசியிருந்தா,மன்னிச்சிருப்பா.அதுக்கு உன்ட பெரியதனம் விடல இல்லியா?”சற்று சத்தமாகவே பேசிவிட்டேன்.அவன் மெளனமாக இருந்தான்.கண்கள் கலங்கியிருந்தன.
ஹுஸ்னா மகளுக்கு கொத்தமல்லி ஆவிபிடிக்க கொதித்த கொத்தமல்லி நீரை எடுத்துச் சென்றாள். என்னை முறைத்த பார்வையில் என் மீது அதனை ஊற்றி விடுவாளோ என்ற அச்சம் தோன்றியது. எனினும் அவளது அன்பில் எனக்கு அதை விடவும் நம்பிக்கையிருந்தது. அஹ்மதை நானே கூட்டிச்சென்று வீட்டில் விடும் போது நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது.
இத்தனை தாமதமாய் இந்த ஆறுமாத திருமண வாழ்வில் வீடு சென்றதில்லை என்பதை அவன் சொல்லியிருந்தான். கதவு திறந்திருந்தது. உள்ளே கதிரையில் அவன் மனைவி தூங்கியிருந்தாள். அவன் தட்டி எழுப்பியவுடன் திடுக்கிட்டு எழுந்தவள் அவனை ஆரத்தழுவிக்கொண்டாள். அவனும்தான்…நான் கதவை சாத்திவிட்டு வெளியேறினேன்.
வீட்டினுள் மகள் எழுந்து அழுதுக்கொண்டிருந்தாள். மகனும் கத்துகின்றான். இருவரையும் சமாதானப்படுத்துவதில் அலுத்துப் போயிருந்தாள் ஹுஸ்னா. மெதுவாக மகளைத் தூக்கியெடுத்து தாலாட்டி உட்கார வைத்துவிட்டு திரும்பும்போது மகனும் தாயின் மடியில் தூங்கியிருந்தாள்.ஹுஸ்னாவின் முகத்தைப் பார்த்தேன். குனிந்துக்கொண்டாள். நான் தனியாகப் போய் படுக்கையில் சாய்ந்துக்கொண்டேன். இந்த சில நாட்களாய் இப்படித்தான்.
பொழுது யாருக்காகவும் காத்திருப்பதில்லை.காலை உதயமானது.பல் துலக்கி தாமதமாகமல் தயாராகிக் கொண்டிருக்கையில் தேனீர் ஊற்றி வந்துள்ளதன் அடையாளமாய் கோப்பை ஆடும் சத்தம் கேட்டது.மகள் அஸ்பா இன்னும் படுக்கையில் தான் இருந்தாள்.அரை நாள் விடுப்பு போட்டுவிட்டு வந்து மருந்து எடுக்க கூட்டிக்கொண்டுப் போகவேண்டும் என்ற எண்ணத்தோடு தேனீரைக் குடித்தேன்.நன்றாக இருந்தது.அதற்காக நன்றி சொல்லமுடியவுமில்லை.
மகளின் நெற்றியில் கையை வைத்தபோது விழித்துவட்டாள்.
“நான் பகலைக்கு வந்து மருந்துக்கு கூட்டிக்கொண்டுப்போறேன்.நீங்க உம்மாகிட்ட மருந்து வாங்கி குடிங்க.”
என்று முடிக்கையில் அவள்..“வாப்பா நீங்க முந்தி மாதிரி உம்மாகிட்ட சொல்லிட்டு போறதில்ல.பேசுறதுமில்ல.உம்மா எங்கள உட்டுட்டு போயிட்டா?”
ஹுஸ்னா கையில் பெரிய பேக்குடன் மகனைத் தோளில் போட்டுக்கொண்டு செல்வதுப்போலவும்,மகள் அஸ்பா வாசலில் நின்று அழுவதுப்போலவும்,நான் தலையில் கை வைத்துக்கொண்டு சுவரில் சாய்ந்திருப்பதுப்போலவும் எண்ணமொன்று மனதில் தோன்றி மறைந்தது.எனக்குள் அச்சம் குடிக்கொண்டது.இதயம் வேகமாக துடித்தது.கையில் பேக்கை எடுத்துக்கொண்டு எட்டிப் பார்த்தேன்.சமையலறை வாசலில் ஹுஸ்னா நின்றிருந்தாள்.
நன்றி: சலனம் இதழ் - 06